எகிப்திலிருந்து காஸாவுக்கும் காஸாவிலிருந்து எகிப்துக்கும் மக்கள் சென்று வருவதற்காகப் பயன்படுத்திய ரபா கடவையை எகிப்திய அதிகாரிகள் கடந்த வாரம் மூடியுள்ளனர். கடவை மூடப்பட்டதற்கான காரணம் தொழில்நுட்பக் கோளாறுகள் என எகிப்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எகிப்திய பக்கம் தொடர்பாடல் கேபில்கள் செயலிழந்து போனமையே கடவை மூடப்பட்டதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது. ரமழானின் ஆரம்பத்தில் புனித ரமழான் மாதம் முழுவதும் ரபா எல்லைக் கடவை திறந்து வைக்கப்படும் என எகிப்திய அரசாங்கம் அறிவித்திருந்தது.
ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் அல் ஸீஸி, தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் “ரமழான் மாதம் முழுவதும் காஸாவிலுள்ள சகோதரர்களின் கஸ்டங்களைக் குறைப்பதற்கு ரபா எல்லைக் கடவையைத் திறந்து வைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளேன்” என அறிவித்திருந்தார். ஆனால், தற்போது திடீரென்று கடவை மூடப்பட்டுள்ளதால் காஸா மக்கள் பெருந் துயரை எதிர்நோக்கியுள்ளனர்.
காஸாவின் ஒரு புறம் இஸ்ரேலின் தடுப்புச் சுவரும், இன்னொரு புறம் மத்திய தரைக் கடலும், மற்றொரு புறம் ரபா எல்லைப் புறமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.